காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 10 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை காவலர்களுக்கு, சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக டிஐஜி சத்யபிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை. காஞ்சிபுரம் சரக காவல்துறையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய காவல் மாவட்டங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான போலீசார், பொதுமக்களுக்கான சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பணிகளை 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் காவல் சரகத்தில் காஞ்சிபுரத்தில் 30, செங்கல்பட்டில் 32, திருவள்ளூரில் 31 என 93 பேர், கடந்த 25 ஆண்டுகளாக காவல்துறையிலும், கடந்த 10 ஆண்டுகளாக தலைமை காவலராக பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, எவ்வித புகாரும் இன்றி செயல்பட்ட காஞ்சிபுரத்தில் 29, செங்கல்பட்டில் 28, திருவள்ளூரில் 27 பேர் என 84 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், விடுபட்ட 9 தலைமை காவலர்களின் பதவி உயர்வு, புகார் நிறைவு பெற்றதும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.