* துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி
கெங்கவல்லி : கெங்கவல்லி அடுத்த ஆணையம்பட்டி ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 230 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மைய பகுதியில் உள்ள 3 ஆழ்துளை கிணறுகள் மூலம், ஆணையம்பட்டி ஊராட்சி பகுதிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக கடும் வெயில் காரணமாக ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இதுகுறித்து ஊராட்சி சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏரி முழுவதும் துர்நாற்றம் வீசிகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஏரியில் அதிகமாக மீன் இருப்பதால், மீன் பிடிப்பதற்கு ஆசைப்பட்டு, யாராவது மருந்து கலந்து விட்டார்களா? இல்லை உண்மையிலேயே வெயில் காரணமாக மீன்கள் செத்து மடிந்துள்ளதா? என பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தவேண்டும்.
துர்நாற்றம் வீசும் ஏரியில் இருந்து தண்ணீரை பயன்படுத்தி வருவதால், ஏதாவது நோய் உண்டாகும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அதிகாரிகள் ஏரியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றனர்.