×

கடலூரில் பரபரப்பு : மருத்துவ காப்பீட்டு அட்டை பெற அலுவலகத்துக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்ட நோயாளி

கடலூர் : கடலூரில் மருத்துவ காப்பீட்டு அட்டை பெற அலுவலகத்துக்கு நேரடியாக நோயாளி கொண்டு செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கடலூர் திருவந்திபுரம் அடுத்துள்ள கே.என் பேட்டையை சேர்ந்தவர் சேஷாச்சலம் மகள் பேபி (60). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகவில்லை. வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வீட்டில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே எக்ஸ்ரே மற்றும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற நிலையில் இலவச சிகிச்சைக்கு அங்கிருந்த மருத்துவர்கள் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கான அட்டை வாங்கி வரும்படி கூறி உள்ளனர்.

இதையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அங்குள்ள காப்பீட்டு திட்ட அலுவலகத்திற்கு நோயாளி பேபியை கொண்டு சென்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட பேபி பின்னர் அங்கிருந்து ஸ்டெக்சரில் காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்கான அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் பத்து நிமிடத்திலேயே காப்பீட்டு திட்டத்திற்கான அட்டையை வழங்கினர். பின்னர் அவர் மீண்டும் ஆம்புலன்சில் சென்றுவிட்டார். இதற்கிடையே ஆட்சியர் அலுவலகத்திற்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பெறுவதற்காக நோயாளி ஸ்டெக்சரில் அழைத்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது போன்ற தருணங்களில் நோயாளிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு காப்பீட்டு திட்ட அட்டை வழங்குவதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் கடலூர் மாவட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் நோயாளிகளின் நிலைப்பாட்டை கருத்தில்கொண்டு நேரடியாக அவர்களை பார்வையிட்டு அட்டை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.


Tags : Cuddalore , Cuddalore, Medical Insurance card, Patient
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!