ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் காா்டன் பாத்திகளில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் தற்போது பூக்க துவங்கியுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆா்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். ஊட்டியில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக, வார விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை சீசனின்போது வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் புதிய மலா் செடிகள் நடவு பணிகள், தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்தல், ரோஜா செடிகளை கவாத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து பூங்காகளில் மலா் செடிகள் பூக்க துவங்கி உள்ளன.
ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேற்பகுதியில் இத்தாலியன் கார்டன் அமைந்துள்ளது. இதன் அருகில் பிறைநிலவு வடிவில் அல்லிகுளம் அமைந்துள்ளது. தாவரவியல் பூங்காவிற்கு வரும் 90 சதவீத சுற்றுலா பயணிகள் இத்தாலியன் கார்டனை பார்வையிடாமல் இருப்பதில்லை. இத்தாலியன் பூங்காவிற்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால், இங்கு உள்ள சிறிய சிறிய அலங்கார பாத்திகளில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இவை தற்போது பல்வேறு வண்ணங்களில் பூக்க துவங்கியுள்ளன. இது மட்டுமில்லாமல் அழகிய ேவலைபாடுகளுடன் கூடிய யானை சிலை, பழங்காலத்து பீரங்கிகள் போன்றவைகள் உள்ளன. இதன் முன்பு புகைப்படம் எடுத்து கொள்ளவும் சுற்றுலா பயணிகள் ஆா்வம் காட்டுகின்றனர். இதனால், கோடை விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை இத்தாலியன் பூங்கா வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.