பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு அருகே கரடி ஊருக்குள் புகுந்து வாளியில் இருந்த தண்ணீரை குடித்தது. இதைப்பார்த்து பீதியடைந்த மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கேரள - தமிழக எல்லையான மேற்குதொடர்ச்சிமலை பரம்பிக்குளம் காட்டுப்பகுதியில் அதிகளவில் கரடிகள் உள்ளன. இவற்றில் ஒன்று வழிதவறி கொல்லங்கோடு பகுதிக்கு வந்தது. பின்னர், அது சீதார்குண்டு அடுத்த தடிக்காடு மலையரவாரத்திற்குள் புகுந்தது.
இங்கு ஜானு என்ற பெண்ணின் வீட்டிற்கு வெளியே இருந்த வாளியில் இருந்த தண்ணீரை குடித்தது. இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். ஊருக்குள் கரடி புகுந்த தகவல் அறிந்ததும் இந்த பகுதி மக்கள் பீதியடைந்தனர். கரடியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.