மதுரை: மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்த மாணவர் சேர்க்ககையின் போது, மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு காத்திருக்கும் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் அமைப்பின் தலைவர் ஜோதீஸ் குமரவேல், துணை தலைவர் தீப்தா, பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வில் ஹிப்போகிரடிக் உறுதி மொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழியை மாணவர்கள் எடுத்தனர். உறுதிமொழி ஏற்பின்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ‘சமஸ்கிருத உறுதிமொழியான ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அவசரகோலத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மகரிஷி சரக் சப்த் உறுதிமொழி எடுத்துவிட்டோம். இதில் எந்த அரசியலும் இல்லை. கல்லூரி நிர்வாகத்தில் உள்ள யாரிடமும் இது குறித்து கேட்காமலேயே நாங்களாகவே உறுதிமொழியை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து உறுதிமொழி ஏற்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை கலெக்டர் அனிஷ் சேகர், மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் அமைப்பை சேர்ந்த 4 பேரை அழைத்து இன்று விசாரணை நடத்தி வருகிறார்.