×

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி பிரிட்டன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்தன!!

கொழும்பு :  இலங்கை நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூட உள்ள நிலையில், அந்நாட்டு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி பிரிட்டன், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கும் இலங்கையில் உணவு,சமையல் எரிவாயு, எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இவை அனைத்திற்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினரே பொறுப்பு எனக்கூறி இலங்கையில் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இலங்கை மட்டுமல்லாமல் தமிழர்கள் வசிக்கும் பிரிட்டன்,கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பங்கேற்றனர். இதே போன்று நியூசிலாந்து நாட்டின் வெல்லிங்டன் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை வம்சாவளி மக்கள் போராட்டம் நடத்தினர். பதவி விலகுக கோத்தபய என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு அவர்கள் முழக்கம் எழுப்பினர்.  

ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான போராட்டம் உச்சம் பெற்ற நிலையில், இலங்கை நாடாளுமன்றம் நாளை மறுநாள் கூடுகிறது. நாடாளுமன்றத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மீதான தகுதி நீக்க தீர்மானம் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஏற்கனவே மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சி ராஜபக்சேவுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதால் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. எனவே தேசிய அரசு ஒன்றை உருவாக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு வசதியாக பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவை நீக்கவும் அவர் முன்வந்துள்ளார். 


Tags : Britain ,New Zealand ,President ,Gotabhaya Rajapaksa , Sri Lanka, President, Gotabhaya Rajapaksa, Britain, New Zealand
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...