சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்ராமன் மறைவிற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் (65) மதுரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.
எம்.என்.எஸ். வெங்கட்ராமன் அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் விருதுநகா் மாவட்டச் செயலாளராகவும், தீக்கதிர் நாளிதழின் பதிப்பாராகவும், தலைமைப் பொது மேலாளராகவும் இருந்துவருகிறார். கம்பம் பகுதியில் மே தின பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் பங்கேற்றார். பின்னர், கூட்டம் நிறைவு பெற்றதும் மதுரையில் உள்ள தீக்கதிர் தலைமை அலுவலகத்துக்கு நேற்றிரவு வெங்கட்ராமன் கிளம்பினார். அப்போது பேருந்த நிறுத்தத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவர் இறந்தார்.
அவரின் உடல் விருதுநகரில் உள்ள மாக்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதிச் சடங்குகள் அருப்புக்கோட்டை வட்டம் எம்.ரெட்டியபட்டி கிராமத்தில் இன்று மாலை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, அவரின் மறைவுக்கு பல தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இரங்கல் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது, கண்ணீரால் கடக்க முடியா கொடும் இரவாய் மாறிவிட்டது
நேற்றிரவு. தோழமை என்ற சொல்லின் பொருளாய் வாழ்ந்தவர். இயக்கத்துக்காய் இமைப் பொழுதும் சோராது உழைத்தவர். எண்ணிலடங்கா தோழர்களின் பெருந்தலைவனாய் வாழ்ந்து, வழிகாட்டியவர். அன்புத்தோழர் எம் என் எஸ் வெங்கட்ராமன் காலமானார் அவர்க்கு செவ்வணக்கம் என அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.