சென்னை: தமிழகத்திலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள், அவற்றின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ஆணையர் குமரகுருபரன் உத்தரவின்பேரில் வழிகாட்டி கையேடு அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், முக்கியத்துவம் மற்றும் பழமை வாய்ந்த பல கோயில்கள் இருந்தும், அந்த கோயில்கள் தொடர்பான வரலாறு மற்றும் தகவல்கள் பொதுமக்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில் அந்த கோயில்களை பிரபலப்படுத்தும் முயற்சியில் அறநிலையத்துறை இறங்கி உள்ளது. அதன்பேரில் மாவட்ட வாரியாக கையேடு ஒன்று தயாரிக்க ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். அந்த கையேடுகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த கோயில்கள், அதன் தலவரலாறு, எந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்டது, கோயில்களை பார்க்க வேண்டிய இடம், அந்த கோயிலுக்கு செல்லும் வழி, கோயில் அலுவலர்களின் தொலைப்பேசி எண்கள், அந்த கோயிலை சுற்றியுள்ள சுற்றுலாதலங்களின் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய கையேடு வழங்கப்படுகிறது.
இந்த கையேடுகள் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் வைத்து விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த கையேட்டை பயன்படுத்தி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் அந்த கோயில்களுக்கு செல்ல எளிதாக இருக்கும். அதன்படி தற்போது புதிதாக வழிகாட்டி கையேடு தயாரிக்கப்படுகிறது.
இதுகுறித்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலை மற்றும் பட்டியலை சாராத கோயில்களில் குறிப்பிடும்படியாக நடைபெற்ற திருவிழா நிகழ்வுகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் நடைபெற்ற சிறப்பு அம்சங்கள் , புகைப்படங்கள், புகைப்படம் சார்ந்த பொருட்களுடன் வழிகாட்டி கையேடு தயாரிக்க அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.