தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு:
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த 18.09.2021 அன்று நடைபெற்று. எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 15.2.22 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர், கைத்தறி மற்றும் ஜவுளித்துறையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 9ம் தேதியும், நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரைவாளர் தெரிவு தொடர்பான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 12 மற்றும் 13ம் தேதியும்.
பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளர் தெரிவு தொடர்பான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகிற 16ம் தேதி முதல் 18ம் தேதி வரையும் சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும். விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
எனவே அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழக்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.