ஊட்டி: கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இம்மாதம் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை 5 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது. மலர் கண்காட்சிக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் பராமரிக்கப்பட்டு பச்சை கம்பளம் விரித்தார்போல் காட்சியளிக்கிறது.
35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூத்துள்ளன. குறிப்பாக, மேரிகோல்டு, சால்வியா, பேன்சி, பிகோனியா, கேலண்டுள்ளா மற்றும் டேலியா போன்ற மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். மலர் கண்காட்சியின் போது, அவை அனைத்தும் மாடங்களில் வைக்கப்படும். தற்போது பூங்காவில் உள்ள பெரணி இல்லம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல் சுற்றுலா பயணிகள் பல்வேறு வகையான பெரணி செடிகளை கண்டு ரசிக்கலாம்.