புதுடெல்லி: உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை கவுரவிக்கும் வகையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசுகையில், ‘நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதற்கான வழிகளை நீதிபதிகள் கண்டறிய வேண்டும். விசாரணை நீதிமன்றத்தில் 24,000 நீதிபதிகளின் பணியிடங்கள் உள்ளன; அவற்றில் 5,000 காலியாக உள்ளன. விசாரணை நீதிமன்றத்தில் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உயர்நீதிமன்றங்களில் 42 லட்சம் சிவில் வழக்குகளும், 16 லட்சம் கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 30 வருடங்களாக விசாரணை நீதிமன்றத்திலும், 10 முதல் 15 வருடங்களாக உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், நீதித்துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை கிடைப்பது கடினமாகிறது. வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் அரசுகள் ஒன்றிணைந்து, நீதிமன்ற வழக்குகளை குறைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். கிட்டத்தட்ட எழுபத்தைந்து சதவீத விசாரணைக் கைதிகள் காவலில் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள் மற்றும் வசதி இல்லாதவர்களாக உள்ளனர். இவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். சரியான நேரத்தில் நீதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்’ என்றார். தொடர்ந்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எழுப்பிய பிரச்னைகளை ஏற்றுக்கொள்கிறேன். அவர் வெளிப்படுத்திய கவலைகளை முழுமையாக ஆதரிக்கிறேன். நீதித்துறையில் வழக்குகள் ஏன் அதிகளவில் நிலுவையில் உள்ளன என்பதை நாளை விளக்குகிறேன்’ என்று கூறினார்.