×

ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து நெல்லூருக்கு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதி: மீண்டும் இயக்க கோரிக்கை

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தியிலிருந்து நெல்லூருக்கு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி அரசு பணிமனையில் இருந்து நெல்லூர் மாவட்டத்திற்கு தினமும் 7 பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் பஸ்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில் பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ஆனால், பஸ்களை இயக்கவில்லை.  இந்த பஸ்கள் நிறுத்தியதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருப்பதியில் இருந்து நெல்லூருக்கு செல்லும் பஸ்கள் நெடுஞ்சாலை வழியாக செல்கின்றன. கூடூர் டிப்போ பணிமனை சேர்ந்த ஒரு சில பஸ்கள் மட்டுமே ஸ்ரீகாளஹஸ்தி அரசு பஸ் நிலையத்திற்கு வருகின்றன.

இதற்காக பயணிகள் மணிக்கணக்கில்  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதிகமானோர் நெல்லூர் மற்றும் கூடூருக்கு செல்கின்றனர். ஆனால், ஸ்ரீகாளஹஸ்தியிலிருந்து நேரடியாக நெல்லூருக்கு பஸ்கள் இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஸ்ரீகாளஹஸ்தி பணிமனையில் இருந்து முன்பு திருமலைக்கு 24 பஸ்கள் இயங்கப்பட்டன. தற்போது அதனை 19 ஆக குறைத்துள்ளனர்.

இதேபோல், ஸ்ரீகாளஹஸ்தி- திருப்பதிக்கு இடையே பஸ்கள் 21 இயங்கின. ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை 16 ஆக குறைத்துள்ளனர். பிரபல ஆன்மிக தலமான ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இயங்கும் பஸ்கள் எண்ணிக்கை குறைந்ததால் பயணிகள் அதிகளவில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  எனவே, கூடுதல் பஸ்கள் மீண்டும் இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ்கள் ஏன் நிறுத்தப்பட்டது?
இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி பணிமனை மேலாளர் சுப்பிரமணியம் கூறுகையில், ‘தற்போது டீசல், விலை அதிகரித்து வருகிறது. அரசு போக்குவரத்து கழகத்திற்கு லாபம் குறைந்து வருவதால் ஸ்ரீகாளஹஸ்தி நெல்லூருக்கு இடையே பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது. நெல்லூர் செல்லும் பயணிகள் கூடூர் மற்றும் வாகாடு பணிமனை பஸ்களில் செல்கின்றனர். இதுகுறித்து மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Srikalahasthi ,Nellore , Devotees suffer as buses from Srikalahasti to Nellore are stopped: Re-demand
× RELATED திருக்கோவிலூர், நெல்லூரில் பயங்கரம்: இரு விபத்துகளில் 6 பேர் பலி