×

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.69 கோடிக்கு ஆடுகள் விற்பனை: சந்தைகளில் போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கினர்

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூ.69 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆட்டுச் சந்தைகளில் போட்டி போட்டுக் ெகாண்டு வியாபாரிகளை ஆடுகளை வாங்கி வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை வருகிற 3ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்போது ஆடுகளின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், செஞ்சியில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை ஆடுகள் விற்பனைக்கு தனி சிறப்பு வாய்ந்தது.  

வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் வார சந்தை வழக்கம் போல் நடந்தது. சென்னை, திருவண்ணாமலை, வேலூர், சேலம், புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் செஞ்சி சந்தைக்கு வந்து போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. வாங்கிய ஆடுகளை  லாரி மற்றும் வேன்களில் ஏற்றி கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சுமார் ரூ.6 கோடி அளவுக்கு விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் இந்த வாரம் ஆட்டுச்சந்தைகள் நடந்தன. இந்த ஆட்டுச் சந்தைகள் ரம்ஜான் பண்டிகையால் களைக்கட்டின. ஆடுகளும் அதிக அளவில் விற்பனையானது. சென்னைக்கு மட்டும் 50 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் மட்டும் சுமார் ரூ.40 கோடிக்கு ஆடுகள் வியாபாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை புளியந்தோப்பு ஆட்டு தொட்டி, சைதாப்பேட்டை சந்தை, ரெட்டேரி மற்றும் தாம்பரம் சானடோரியம் சந்தை ஆகியவற்றில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆடுகள் விற்பனை சூடுபிடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மட்டும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் இந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு ஆட்டுச்சந்தை தொடங்கியது. இதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி, கொங்கணாபுரம், வீரகனூர், நாமக்கல் மாவட்டம் மெட்டாலா ஆகிய இடங்களில் ஆட்டுச்சந்தைகள் நேற்று கூடியது. இந்த சந்தைகளில் சுமார் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 26ந்தேதி கால்நடை சந்தை நடைபெற்றது. இதில் ரம்ஜானை முன்னிட்டு தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அன்று ஒரே நாளில் ரூ.1.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
எட்டையபுரத்தில் கால்நடைச்சந்தை நேற்று கூடியது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கால்நடைகளுடன் வியாபாரிகள் வந்தனர். நேற்று நடைபெற்ற சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் கால்நடைகள் விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. சுமார் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆத்துமேடு, புதிய பஸ் நிலையம் மற்றும் பெரிய பேட்டை பாலாற்று பகுதி ஆகிய 3 இடங்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் ஆடு சிறப்பு விற்பனை சந்தை நடைபெற உள்ளது. குந்தாரப்பள்ளியில் நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இந்த சந்தையில் நேற்று முன்தினம் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டம் அன்னூர் சந்தையில் நேற்று அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேற்று மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை நடைபெற்றது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் ரூ.69 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Ramadan , Ramadan festival, sale of goats, traders
× RELATED ரமலான் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து