சென்னை: தமிழ்நாட்டில் 5 முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு உடனடியாக செலுத்தும் வகையில் தடுப்பூசி தயார் நிலையில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், மடுவின்கரை மேல்நிலைப்பள்ளியில் ரூ.52 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார், கோடம்பாக்கம் மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கணினி ஆய்வகம் டெமனாஸ் நிறுவனத்தின் அடோப்ட் ஐடி என்கிற திட்டத்தின் மூலம் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.52 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 உயர்நிலைப் பள்ளிகளும், 38 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் மிக வள வகுப்பறைகள் ஹைடேக் அமைக்கும் பணி படிப்படியாக நடந்து வருகிறது. மேலும் சிஐடிஐஐஎஸ் திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 22 மாநகராட்சி பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் சிஎஸ்ஆர் நிதியின் கீழ் பல்வேறு வகையான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவிட் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சிஎஸ்ஆர் நிதியில் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று டெமனாஸ் மென்பொருள் நிறுவனத்தின் சார்பில் சேப்பாக்கம். திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட கணினி மையத்தை 2 நாட்களுக்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது மடுவின்கரை மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுளது. இதுபோன்ற தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது என்றார்.
மேலும், ‘‘தமிழகத்தில் 5 முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்களுக்கு தடுப்பூசி உடனடியாக செலுத்தும் வகையில் தயார் நிலையில் உள்ளது’’ என தெரிவித்தார்.