சென்னை: அகில இந்திய பாரா ஒலிம்பிக் சங்கம், தமிழ்நாடு பாரா கபடி சங்கம் இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான 4வது அகில இந்திய கபடிப் போட்டி சென்னையில் நடக்கிறது. அதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் தமிழ்நாடு, லீக் சுற்றில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், கர்நாடகா அணியுடன் நேற்று மோதியது.
தமிழக வீரர்கள் சந்தோஷ், நந்தகுமார் சரண்ராஜ், மோகன் ஆகியோர் சிறப்பாக விளையாடி புள்ளிகளைக் குவித்தனர். சக வீரர்கள் மகேஷ், ரமேஷ், சாது, வெற்றி, பிரவீன், வரதா, சுகுமார் அன்பழகன் ஆகியோரும் ஒருங்கிணைந்து விளையாடி கை கொடுத்தனர். கர்நாடகா வீரர்கள் 2வது பாதியில் வேகம் காட்டி தமிழக வீரர்களை கொஞ்சம் திணற வைத்தாலும், அது வெற்றிக்கு உதவவில்லை.
ஆட்ட நேர முடிவில் தமிழகம் 33-21 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது. மற்றொரு லீக் ஆட்டத்தில் புதுச்சேரி - அரியானா அணிகள் மோதின. அதில் புதுச்சேரி 35-15 என்ற கணக்கில் அரியானாவை வீழ்த்தியது.