×

பள்ளிக்கு சென்றவரை வழிமறித்து வாக்குவாதம் காதலை ஏற்க மறுத்த பிளஸ் 2 மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது-குன்னூரில் பரபரப்பு சம்பவம்

குன்னூர் : குன்னூரில் காதலை ஏற்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17 வயது மகள் நீலகிரி மாவட்டம் குன்னூர் உமரி கட்டேஜ் பகுதியில் வசிக்கும் தனது சித்தப்பா வீட்டில் தங்கி கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். மாணவி தினந்தோறும் கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். நேற்றும் காலை 9 மணிக்கு மாணவி நகராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள குறுகலான பாதையில் பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது மாணவியை வாலிபர் ஒருவர் வழிமறித்தார். ‘‘நான் உன்னை காதலிக்கிறேன்.

நீயும் என்னை காதலிக்க வேண்டும்’’ என்று வற்புறுத்தினார். ஆனால் காதலை அந்த மாணவி ஏற்க மறுப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தினார். இதனால் காயமடைந்த மாணவியின் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்த வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் மக்கள் அந்த வாலிபரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இது குறித்து குன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் குன்னூர் கீழ் பள்ளி வாசல் பகுதியை சேர்ந்த ஆஷிக் (26) என்பது தெரியவந்தது.

அவர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். எனவே தினந்தோறும் இந்த பகுதியில் மாணவியை பின்தொடர்ந்தது சென்று காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார்.
நேற்று கஞ்சா போதையில் மாணவியிடம் காதலை தெரிவித்துள்ளார். மாணவி அதை ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆஷிக் மீது கொலை முயற்சி மற்றும் போக்சோ வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.  பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Coonoor , Coonoor: Police arrested a student who refused to accept love in Coonoor with a knife. Coimbatore District Karamadai
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...