கூடலூர் : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள லண்டனா எனப்படும் உண்ணிச் செடி குச்சிகளை கொண்டு தெப்பக்காடு லைட்பாடி பகுதியில் வசிக்கும் பெட்டகுரும்பர் இன பழங்குடியின மக்கள் வீட்டு உபயோக மற்றும் கைவினைப் பொருட்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உள்ள பழங்குடியின மக்கள் 10 பேர் இணைந்து சுய உதவி குழு அமைத்து உண்ணிச்செடி கம்புகள் மூலம் இந்த வீட்டு உபயோகப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘லண்டனா உண்ணிச் செடிகளின் குச்சிகளை கொண்டு கட்டில், மேசை, நாற்காலி, கூடைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களையும் தயாரித்து வருகிறோம். ஆரம்பத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் தொகையை கொண்டு இந்த பணிகளை ஆரம்பித்தோம். இதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மூலம் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் உதவியாக வழங்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த கைத்தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வங்கியில் வாங்கிய கடனை அடைத்து வருவதோடு தங்கள் குடும்பத்திற்கு தேவையான செலவுகளை ஈடுகட்டி வருகிறோம் என தெரிவித்தனர்.