×

போச்சம்பள்ளி அருகே டூவீலர் உதிரிபாக விற்பனை கடையில் நள்ளிரவில் தீ விபத்து-பொருட்கள் எரிந்து நாசம்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகன உதிரி பாக விற்பனை கடையில் ஏற்பட்ட தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அனைத்தனர். இதில் பொருட்கள் எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மேல் தங்கம்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் போச்சம்பள்ளி- திருப்பத்தூர் சாலையில், டூவீலர் உதிரிபாகங்கள் மற்றும் ஆயில் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை பன்னீர்செல்வம் பூட்டி விட்டு சென்றார்.

இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில், கடையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால், கடையில் இருந்த ஆயில் டப்பாக்கள் வெடிக்க தொடங்கியது. சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும், போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். தீ கொளுந்து விட்டு எரிந்ததால், ஊத்தங்கரை தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து, இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா என போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pochampally , Bochampally: Firefighters battled a two-hour fire at a two-wheeler spare parts shop near Pochampally.
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...