தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், தன்னுடன் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு, பள்ளி வளாகத்தில் வைத்து, கடந்த சில நாட்களுக்கு முன் தாலி கட்டியுள்ளார். இதை பார்த்த மற்ற மாணவர்கள், இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சாந்தி மற்றும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், நேரடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் இது குறித்து விசாரித்தனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து மாணவ, மாணவியரை எச்சரித்து அனுப்பினார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அன்பழகன் தலைமையிலான கல்வித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.