×

கோயம்பேடு பஸ் நிலையத்தில் மனைவி, கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து: கணவனுக்கு வலை

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் மனைவி, கள்ளக்காதலனை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (21). இவர், அயனாவரத்தை சேர்ந்த சுவாதி (19) என்பவரை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்தார். தற்போது, பட்டினப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுவாதிக்கு, கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான சத்தியகண்ணன் (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறியதால் கடந்த 3 மாதங்களாக இருவரும் ஜாலியாக சுற்றி திரிந்துள்ளனர். இதுகுறித்து சுவாதியின் கணவருக்கும் தெரியவந்தது. இதனால் இருவரையும் அவர் கண்காணிக்க தொடங்கினார்.

இந்நிலையில்,  நேற்று முன்தினம் இரவு 11.30 மணிளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுவாதியும் சத்தியகண்ணனும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த ராஜேஷ், இருவரையும் பார்த்து அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவாதியையும், சத்தியகண்ணனையும் சரமாரியாக குத்தினார். பிறகு ராஜேஷ் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த பயணிகள் சிலர் அவரை பிடிக்க முயற்சி செய்தபோது, அவர்களையும் மிரட்டி,  தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே, கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தனர். இதை பார்த்த அங்கிருந்த  பயணிகள் பீதியில் ஓடினர். பிறகு போலீசார்  பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வாலிபர் ஒருவர் கத்தியால் ஆண் மற்றும் பெண் ஒருவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பித்து ஓடுவதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த கோயம்பேடு போலீசார், சம்ப இடத்திற்கு விரைந்து  வந்தனர். இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுவாதிக்கு 5 தையலும், சத்தியகண்ணனுக்கு 4 தையலும் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து,  போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை வலைவீசி தேடி வருகின்றனர்.





Tags : Coimbatore , At the Coimbatore bus stand Wife, screaming for false lover: web for husband
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு