×

காதல் ஜோடி மீது விபசார வழக்கு போடுவதாக மிரட்டிய 2 போலீஸ்காரர்கள் கோவையில் கைது

சூலூர்: கோவை சூலூர் நீலாம்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அருகே கடந்த 26ம் தேதி கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த காதல் ஜோடி காரில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 போலீஸ்காரர்கள் காதல் ஜோடியை மிரட்டி ரூ.1 லட்சம் வேண்டும். இல்லை என்றால் உங்கள் மீது விபசாரம் வழக்குபோடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதில் அச்சம் அடைந்த காதலர்கள் கையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு சென்றனர். அடுத்த நாள் காதல்ஜோடி கருமத்தம்பட்டி டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கியராஜிடம் இது குறித்து புகார் அளித்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க சூலூர் போலீசாருக்கு டிஎஸ்பி உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறி போலீஸ்காரர்களை தேடி வந்தனர். விசாரணையில் காதல் ஜோடியிடம் பணம் பறித்தது கருமத்தம்பட்டி போலீஸ்  நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலைக் காவலர் ராஜராஜன் (38), ஆயுதப்படை போலீசார் ஜெகதீஷ் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ராஜராஜன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் ஜோடிகளை குறி வைத்து பணம் பறித்தது தெரியவந்தது. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மே 13ம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி வைஷ்ணவி  உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸ்காரர்கள் இருவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.



Tags : Coimbatore , Threatened to sue the romantic couple for prostitution 2 policemen arrested in Coimbatore
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்