×

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலானது: மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி கத்திக்குத்து; கணவன் தப்பி ஓட்டம்

அண்ணாநகர்: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலானது. இதனால் மனைவி, கள்ளக்காதலனுக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தப்பி ஓடிய கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (21). இவர், அயனாவரத்தை சேர்ந்த சுவாதி (19) என்பவரை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்தார். பட்டினப்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சுவாதிக்கு, கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த சத்தியகண்ணன் (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 3 மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ஜாலியாக சுற்றினர். இது அரசல்புரசலாக கணவருக்கு தெரியவந்தது. இருவரையும் கண்காணிக்க தொடங்கினார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுவாதியும் சத்தியகண்ணனும் பேசி கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அங்கு வந்த ராஜேஷ், இருவரையும் பார்த்து விட்டு கடும் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்தார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவாதியையும், சத்திய கண்ணனையும் சரமாரியாக குத்தி விட்டு ராஜேஷ் தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் இருவரும் அலறி துடித்தனர். இதை பார்த்ததும் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்து கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுவாதிக்கு 5 தையலும், சத்தியகண்ணனுக்கு 4 தையலும் போட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை வலைவீசி தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட கள்ளக்காதலால் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Instagram, False Love, Volley Screaming, Escape
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி