ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த சேரந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் மட்டும் பணியாற்றி வருகிறார். மேலும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் என 2 பேர் உள்ளனர். இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு பள்ளியில் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியில் சமையல் கூடம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுவர்கள் பழுதடைந்து ஒவ்வொரு இடத்திலும் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது.
இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகி அரிசி, பருப்பு மற்றும் இதர பொருட்கள் நனைந்து வீணாகி வருகிறது. மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் நாய்கள் உள்ளே சென்று பொருட்களை நாசம் செய்து வருகின்றன. இதை தவிர்க்க ஆபத்தான நிலையில் காணப்படும் பழைய சமையல் கூடத்தை அகற்றிவிட்டு புதிய சமையல் கூடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.