×

துரை வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சஸ்பெண்ட்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு

சென்னை: துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாவட்டச் செயலாளர்களை வைகோ சஸ்பெண்ட் செய்துள்ளார். சில மாதங்களுக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் தலைமை நிலையச் செயலாளராக துரை வைகோ அமர்த்தப்பட்டார். பிறகு அப்பொறுப்பை மேலும் வலுப்படுத்தி, `தலைமைக் கழகச் செயலாளர்’ என்று பெயர்சூட்டி, அந்தப் பொறுப்புக்கு பொதுக்குழு ஒப்புதலும் பெறும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்கு அக்கட்சியில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்னையால் கட்சியின் பொதுக்குழு கூட்டம் முன்கூட்டியே நடத்தப்பட்டது. அதில், தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோவுக்கும், அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைகோவுக்கும் அதிகாரம் அளித்தும் ஒப்புதல் வழங்கப்பட்டது. பிறகு அதிருப்தியாளர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை  சஸ்பென்ட் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர்,

மதிமுக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட அவர்கள் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, மதிமுகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Durai Vaiko , Protesters suspend Durai Vaiko
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...