×

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.300 கோடி ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்பு: அறநிலைய துறை அதிகாரிகள் அதிரடி

சென்னை: மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும், கிழக்கு கடற்கரை சாலையொட்டி நெம்மேலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஆளவந்தார் நாயக்கர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கடற்கரையை ஒட்டி சவுக்கு கன்று பயிரிட்டு, அதனை பசுமையாக பராமரித்து வந்தார். இதை பார்த்த ஆங்கிலேயே அதிகாரிகள், அவருக்கு 1,054 ஏக்கர் நிலத்தை வழங்கி கவுரவித்தனர். பின்னர், தனது பெயரில் உள்ள சொத்துக்கள், அனைத்தும் தர்ம சேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார்.

மேலும், இந்த சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாயில், மாமல்லபுரம் ஸ்ரீதலசயன பெருமாள், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், திருப்பதி ஏழுமலையான் ஆகிய கோயில்களில் உற்சவம் நடக்கும்போது, அன்னதானம் வழங்க, உயில் சாசனத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆளவந்தார் சொத்துக்களை பலர் ஆக்கிரமித்துள்ளதாக, தனிநபர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்புகளை வரும் 30ம் தேதிக்குள் அகற்றி இந்து சமய அறநிலைய துறை கணக்கில் கொண்டு வந்து, எவ்வளவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் வேண்டும் என, இந்து சமய அறநிலைய துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்து சமய அறநிலைய துறை செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல், இந்து சமய தனி வட்டாட்சியர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில், முதற்கட்டமாக நேற்று முன்தினம் பட்டிப்புலம் பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுமார் ரூ.150 கோடி சொத்துக்கள் அதிரடியாக மீட்கப்பட்டன.நேற்று 2வது நாளாக சாலவான்குப்பத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த ஒரு இறால் பண்ணை உள்பட ரூ.300 கோடி வரை சொத்துக்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஒரு தனியார் ஓட்டல் நிர்வாகம் ஆக்கிரமித்து, வேலிகள் மற்றும் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதை அகற்றும்போது, ஓட்டல் ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாமல்லபுரம் டிஎஸ்பி கு.ஜகதீஸ்வரன் தலைமையில் போலீசார், அவர்களை கடுமையாக எச்சரித்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சொத்துக்கள் மீட்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Alavandar Trust , Rs 300 crore Occupied Assets Owned By Alavandar Trust Recovered: Charitable Department Officials Take Action
× RELATED ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை...