பெரம்பூர்: அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரது மனைவி சுமதி (39, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). நந்தகுமார், அதே பகுதியில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், தனது வாட்ஸ்அப் டி.பி.யில் மனைவி சுமதியின் புகைப்படத்தை வைத்திருந்தார். இதை பார்த்த மர்மநபர் ஒருவர், ‘சுமதியின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து, அதை ஆபாசமாக மார்பிங் செய்து, நந்தகுமாருக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்து நந்தகுமார் அதிர்ச்சியடைந்தார். உடனே, அந்த மர்மநபரை செல்போனில் தொடர்புகொண்டபோது, ‘‘நான் கேட்கும் பணத்தை தராவிட்டால், உனது மனைவியின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன்,’’ என மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.