வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில், கிராம சபை கூட்டங்களில் கிராமங்களில் வளர்ச்சி பற்றி என்னென்ன விவாதிக்க வேண்டும் என்பது குறித்து ஊராட்சி தலைவர்கள், செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் வரும் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதற்காக, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், அமல்ராஜ் ஆகியோர் பேசுகையில், கிராம சபை கூட்டத்துக்கு முறையாக ஊராட்சியில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகள், கிராம மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஊராட்சியின் வளர்ச்சி பணிகள், ஊராட்சிக்கு என்னென்ன தேவைகள், ஊராட்சியில் தற்போது என்னென்ன பணிகள் நடக்கின்றன, கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை இன்றி அனைத்து வீடுகளுக்கும், தன்னிறைவான குடிநீர் வழங்குவது குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, வேதபுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.