கோவில்பட்டி: உடல் நலக்குறைவால் கடந்த 4ம் தேதி காலமான இந்திய கம்யூ. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன் படத்திறப்பு விழா, கோவில்பட்டியில் நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், படத்தை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பாஜ ஆட்சி செய்யாத மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் அதிருப்தி தெரிவித்தார் என்று செய்தி சொல்லப்படுகிறது. அவ்வாறு அவர் கூறியிருப்பாரானால் அது தவறான கருத்து.
பாஜ அல்லாது ஆட்சி நடத்தக் கூடிய மாநில முதல்வர்களை, பிரதமர் தனது விருப்பப்படி விமர்சிக்கிற அரசியல் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். ராஜிவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டப்பேரவை பலமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவை முன்பிருந்த கவர்னர்களும் கிடப்பில் போட்டனர். இப்போதுள்ள கவர்னரை கேட்கவே வேண்டாம். இவர், திமுக ஆட்சிக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடுமையான அதிருப்தியை கவர்னர் மீது வெளிப்படுத்தி உள்ளது. இப்போதாவது கவர்னர் உச்சநீதிமன்றத்தை மதித்து செயல்பட வேண்டும், என்றார்.