கோத்தகிரி: கோத்தகிரி கோழிக்கரை பகுதியில் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம்.தற்போது கோடை காலம் நெருங்கிய நிலையில் சமவெளிப் பகுதிகளில் நிலவும் வெயில் காரணமாக வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டம் குஞ்சப்பனை, மாமரம், கோழிக்கரை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளது.
தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள், தேயிலை தோட்டங்கள் ஆகிய பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இங்கு முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.