வேலூர்: வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவரும் அதே கடையில் வேலை பார்க்கும் காட்பாடியை சேர்ந்த வாலிபரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 ஜனவரி 18ம் தேதி இரவு இருவரும் கோட்டை பூங்காவிற்கு சென்று, அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது 3 பேர், காதலனை சரமாரி தாக்கிவிட்டு, கத்தியை காட்டி மிரட்டி காதலனின் கண் முன்னே இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பான புகாரின்படி வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, வேலூர் கஸ்பாவை சேர்ந்த மணிகண்டன்(43), வசந்தபுரத்தை சேர்ந்த கோழி என்கிற சக்திவேல்(21), தொரப்பாடியை சேர்ந்த கொய்யாமாரி என்கிற மாரிமுத்து(31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கை வேலூர் மகிளா கோர்ட் மாஜிஸ்திரேட் கலைப்பொன்னி விசாரித்து மூவரும் குற்றவாளிகள் என நேற்று முன்தினம் அறிவித்து, மறுநாள் தண்டனை விவரம் தெரிவிப்பதாக கூறினார். அதன்படி மணிகண்டன், சக்திவேல் ஆகிய 2 பேருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தும், மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தும் மாஜிஸ்திரேட் நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.