ஆவடி: திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க இன்னாள், முன்னாள் நிர்வாகிகள் மல்லுக்கட்டுகின்றனர். அதிமுகவில் தற்போது உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்ட செயலாளர் உள்பட அனைத்து பதவிகளை பிடிக்க முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் ஏற்கனவே பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது பெரும்பாலான இடங்களில் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிர்வாகிகள் இடையே கோஷ்டி மோதல் நடக்கிறது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கான தேர்தல், ஆவடி அடுத்து பட்டாபிராம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் மற்றும் தற்போது மாவட்ட செயலாளராக உள்ள வி.அலெக்சாண்டர் ஆகியோர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இவர்களை தவிர மாவட்ட செயலாளர் பதவிக்கு புதிதாக 3 பேர் விண்ணப்பம் கொடுத்தனர். இதில் அந்தந்த நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் மற்றும் புதிய நிர்வாகிகள் என பல தரப்பினரும் மல்லுக்கட்டுவதால் உள்கட்சி தேர்தலில் பரபரப்பு நிலவி வருகிறது.