செங்கம்: செங்கம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ராகிங் செய்த 5 மாணவர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சில மாணவர்கள், சக மாணவர்களிடம் ராகிங் செய்துள்ளனர். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், சில மாணவர்கள் பெஞ்சில் அமர்ந்து கொண்டு மற்ற மாணவர்களை நோட்டு, புத்தகம் மற்றும் தேர்வு எழுதும் அட்டை மூலம் விசிறி வீச செய்வதும், அதில் சரியாக வீசாத மாணவனை ஒரு மாணவன் அடிப்பதும், மேஜை, நாற்காலிகளை உடைப்பதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோரிடம் விசாரணை நடந்தது.
இதில் மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன், தாசில்தார் முனுசாமி, பள்ளி தலைமையாசிரியர் காமத் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது, இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமாக நேரில் அளித்த தகவல்களையும் விசாரணை அதிகாரி ஆர்டிஓ வெற்றிவேல் பதிவு செய்தார். பின்னர், இதுகுறித்த தகவல்களை அறிக்கையாக மாவட்ட கலெக்டர் முருகேஷிடம் வழங்கினார். இதையடுத்து ராகிங் மற்றும் கலாட்டாவில் ஈடுபட்ட 5 மாணவர்களை 7 நாட்கள் சஸ்பெண்ட் செய்து செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் அரவிந்தன் நேற்று உத்தரவிட்டார்.