கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள ஆனந்தகிரி 4வது தெருவில் முக்கிய குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. கேரளாவை சேர்ந்த 6 பெண்கள், இப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், நகராட்சிக்கும் புகார் அளித்தனர்.
அதன்பேரில், கொடைக்கானல் நகர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். இதில், அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்து, அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடத்த கூடாது என 6 இளம்பெண்களுக்கும் தெரிவித்து, ஊருக்கு செல்ல அறிவுறுத்தினர். மேலும் மசாஜ் சென்டருக்கு சீல் வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால், ஆனந்தகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.