சென்னை: சட்டப்பேரவையில் குறுகிய கால வினா நேரத்தின் போது ஆலங்குளம் எம்.எல்.ஏ. பால் மனோஜ் பாண்டியன் (அதிமுக) கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில்,‘‘இந்த சட்டசபையில் 100வது கேள்வியும், முதல் குறுகிய கால கேள்வியும் இந்துசமய அறநிலையத் துறைக்கு வந்திருப்பதால், இறைவனின் அருள் முழுவதுமாக இந்த ஆட்சிக்கு உள்ளது என்பதை உணர்த்துகிறது. அந்த கல்லூரி, குற்றாலநாதசுவாமி கோயில் சார்பாக நடத்தப்பட வேண்டி, பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 7.60 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. நல்லெண்ணம் கொண்டோர், நீதிமன்றத்துக்கு சென்றிருப்பதால் அதில் தடை ஏற்பட்டுள்ளது.
கோர்ட்டின் தீர்ப்பைப் பெற்று அதன் வழிகாட்டுதலோடு அந்தக் கல்லூரியை அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். அந்த கோயிலும் அதன் வழிகாட்டுதலோடு அந்தக் கல்லூரியை அமைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். அந்தக் கோயிலில் இரண்டு வகையான அறங்காவலர்களை நியமிக்க வேண்டியது உள்ளது. அதுபோல இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 10 கல்லூரிகளில் முதற்கட்டமாக அறங்காவலர்களை நியமிக்கிற பணியை விரைவுபடுத்தி இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவின்படி இந்த கல்லூரிகள் அமையும். கடந்த காலங்களில் ஏற்பட்ட தொய்வை தற்போதுதான் படிப்படியாக சரி செய்து வருகிறோம்” என்றார்.