×

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் செயல்படும் சட்ட விரோத ரிசார்ட்டுகளை அகற்ற கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பு நிலம் புலிகள் சரணாலயமாக 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நான்காவது புலிகள் சரணாலயமான சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்டுகள் செயல்படுவதாக கூறி, அவற்றை அகற்ற உத்தரவிட கோரி விலங்குகள் நல ஆர்வலரும், வழக்கறிஞருமான சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை  தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 51 ரிசார்ட்டுகள் உள்ளதாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்துக்கு, சத்தியமங்கலம் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும்  கள இயக்குனர் பதிலளித்துள்ளார்.

தேசிய வன விலங்குகள் வாரியத்திடமோ, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடமோ ஒப்புதல் பெறாமல், இந்த ரிசார்ட்டுகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றன. வன உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ரிசார்ட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் வனத்துறை அதிகாரிகள் உள்ளனர். எனவே, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் அனைத்து ரிசார்ட்டுகளையும் சீல் வைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என  கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ரிசார்ட்டுகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை. ரிசார்ட்டுகளை வழக்கில் சேர்க்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags : Chennai High Court ,Satyamangalam Tiger Reserve , Satyamangalam, Tiger Sanctuary, Resort, Discount Discount
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...