சென்னை: மறைந்த முதல்வர் கலைஞருக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைமிகு சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவிப்பு வெளியிட்டார். முதலமைச்சர் ஆற்றிய உரையில், தமிழ்நாட்டின் அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் கலைஞர். தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும், கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்; கவிழ்ந்து விடமாட்டேன் என்று கூறியிருந்தார் என பெருமிதம் தெரிவித்தார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
தமிழ்நாட்டு
அரசியல் நெடுங்கணக்கில்
முன்னெப்போதுமில்லாத
முதல் நிகழ்வு
முதலமைச்சராகத்
தலையெடுத்த தனயன்
முதலமைச்சராகிய
தந்தைக்குச் சிலையெடுப்பது
எட்டிய தரவுகள் வரை
இந்தியாவிலும்
இதுவே முதல் என்று தோன்றுகிறது
முன்னவர் பின்னவர்
இருவரையும் போற்றுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.