ஈரோடு : ஈரோட்டில் உலக மலேரியா தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.உலக மலேரியா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரோடோசோவா என்ற கிருமியால் உருவாகின்ற இந்நோய் கொசு மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்நோய் குறித்தும், தடுக்கும் முறைகள் குறித்து ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் சாலையோரம் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
இதில், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் 3ம் மண்டலம் சார்பில் மலேரியா மற்றும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. இதில், வீடு, பொது இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும். பயன்படுத்தப்படாத பாட்டில்கள், பிளாஸ்டிக் குவளைகள், தேங்காய் ஓடுகள், டயர்கள், மண்பாண்டங்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தொடர் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை உடனடியாக அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
வீடுகளில் குடிநீர் சேகரிக்கும் தொட்டி, பேரல், பாத்திரங்களை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும்.கொசுவர்த்தி போன்றவை பயன்படுத்தாமல், கொசுவலைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பணியில் சுகாதார பணியாளர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக 4 மண்டல அலுவலகங்களிலும் மலேரியா நோய் தடுப்பு உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறினார்.
விழிப்புணர்வு பேரணி: ஈரோட்டில் உலக மலேரியா தினத்தையொட்டியும், உலக ஒலி மாசுபாடு தினத்தையொட்டியும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் விழிப்புணா்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியை இந்திய மருத்தவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ராஜா துவக்கி வைத்தார். பேரணியானது ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் துவங்கி, பெருந்துறை ரோடு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, திருப்பூர் குமரன் சாலை வழியாக ஐஎம்ஏ ஹாலில் நிறைவடைந்தது. பேரணியில், மலேரியாவை ஒழிப்போம், ஒலி மாசுபாடுகளை தடுப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மக்களிடம் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.