மரியுபோல்: உக்ரைனின் மரியுபோல் நகரில் குண்டு சத்தங்களுக்கு மத்தியில் தனியார் உயிரியல் பூங்கா வழக்கம் போல இயங்கி கொண்டிருக்கிறது. போரால் மனிதர்கள் மட்டுமின்றி அரியவகை விலங்குகளும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, மற்ற பகுதிகளை காட்டிலும் துறைமுக நகரான மரியுபோல் மீதே அதிக கவனத்தை வைத்துள்ளது. ரஷ்ய படைகள் வீசிய ஏவுகணைகளால் மரியுபோல் நகரமே சாம்பல் மேடாகியுள்ளது. அங்கிருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்ட போதும் வசுரா என்பவர்தான், தான் நடத்திவரும் உயிரியல் பூங்காவை பராமரிப்பதற்காக அங்கேயே தங்கிவிட்டார்.
சிறுத்தை, குரங்குகள், நெருப்பு கோழிகள், ஒட்டகங்கள் என சிறிய அளவில் இவர் நடத்தி வரும் மிருக காட்சி சாலை, போருக்கு மத்தியிலும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. கடும் போருக்கு மத்தியிலும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் மிகுந்த சிரமத்தோடு விலங்குகளுக்கு தினந்தோறும் உணவளித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு மிருக காட்சி சாலைக்கு அருகே நடந்த குண்டுவீச்சில் ஒட்டகங்கள், நெருப்பு கோழிகள், மாடுகள், குரங்குகள், சிறுத்தை ஆகியவை உயிரிழந்துவிட்டன.
இது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது மரியுபோல் நகரம் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால், இந்த உயிரியல் பூங்காவுக்கான உணவை ரஷ்யாவே வழங்கி வருகிறது. மாஸ்க் உயிரியல் பூங்காவில் இருந்து உணவுகள், உதவிகள் அளிக்கப்படுகின்றன. இதனால் உயிரியல் பூங்கா ஊழியர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். இவ்வளவு சோகத்திற்கு மத்தியிலும் புதிதாக ரங்கூன் குட்டிகள் பிறந்திருப்பதும் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.