கரூர் : கரூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு கருத்தரங்கம் மாநகராட்சி அரங்கில் ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கிற்கு மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் லட்சிய வர்மா, இன்ஸ்பெக்டர்கள் பிரபாகர், சுகுமார், தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசுகையில், தற்போது அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முகக்கவசம் கட்டாயம் அணிய வலியுறுத்தல் சமூக இடைவெளி கடைபிடித்தல் வாடிக்கையாளர்களுக்கு சானிட்டரி வழங்குதல், கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்தல் ,தடுப்பூசி போடாத பொதுமக்களை இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர் மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அரசு அறிவித்தபடி விரைவில் அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் இதனை தடுக்க முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து வெளியே வரவேண்டும், மேலும் மாநகராட்சியில் சுகாதாரத்தை காத்திட பொதுமக்களும் கடை உரிமையாளர்களும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
மேலும் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே நகராட்சியை தூய்மையாக வைத்திருக்க முடியும் என்றார். பால் வியாபாரிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் பழனிச்சாமி பேசும்போது மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி ரோடுகளில் குழி பறித்து ரோடுகளை டேமேஜ் செய்கின்றனர்.
பொதுமக்கள் வெளியில் வைத்து உள்ள குப்பைகள் தெரு நாய்கள் கிழித்து ரோடு முழுவதும் வீசுகிறது எனவே தெருநாய்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதில் கரூர் அனைத்து வர்த்தக சங்கத் தலைவர் வக்கீல் ராஜ் ,அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் வெங்கட்ராமன், தலைவர் அரிசி கந்தசாமி, ஜுவல்லரி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவி மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.