சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கூலிப்படைத் தலைவனை போலீசார் கைது செய்தனர். சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்டச் செயலாளராக இருந்த செல்வம் என்பவரை கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்தனர். இச்சம்பவத்தில் கூலிப்படை ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பின்பு போலீசார் தனிப்படை அமைத்து முன்னதாக 5 பேரை விக்கிரவாண்டியில் கைது செய்தனர். அதன்பின், கூலிப்படை தலைவன் முருகேசன் என்பவரை வியாசர்பாடியில் போலீசார் கைது செய்தனர். திமுக பிரமுகர் வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முத்து சரவணன் என்ற பிரபல ரவுடியையும், இந்த வழக்கில் தொடர்பு இருந்தாக கூறி கைது செய்துள்ளனர்.
முத்து சரவணன் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர். இவர் மீது 4 கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இந்நிலையில், முத்து சரவணன் என்பவர் கூலிப்படையை ஏவி திமுக பிரமுகர் செல்வத்தை கொலை செய்ய பணம் கொடுத்து பேரம் பேசியது தெரியவந்தது. ஒரு கோடி மதிப்புடைய நிலப் பிரச்சனையால் தான் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. வேளச்சேரியில் செல்வம் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கோடி மதிப்புடைய இடத்தை பிடிப்பதில் போட்டி நிலவியதால் இச்சம்பவம் நிகந்துள்ளது. இதன் பின்னணியில் மற்றொரு ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் தலைமறைவாக இருப்பதும், அவரை தொடர்ந்து போலீசார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.