புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற முத்துமாரியம்மன் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். ஆலங்குடியை அடுத்த வடகாடு, முத்துமாரியம்மன் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுகிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதன் முக்கிய திருவிழாவான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அம்மனின் தேரை பக்தி பரவசத்தோடு இழுத்து வழிபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு மனப்பங்குளம் விநாயகர் கோவிலில் இருந்து நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நடைபெற்ற தீ மிதி விழாவில் 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீயில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக கூந்தல் முடிதல் நிகழ்ச்சி நடந்தது. தீ மிதி திருவிழாவில் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.