திருவள்ளூர்: முதலமைச்சரின் 2022ம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது ஆகஸ்டு மாதம் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரால் ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகள் வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்கு 15 வயது முதல் 35 வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2022 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும். இவ்விருதினை பெற 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வெண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. தேர்வு குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு அதில் சிறப்பாக சேவை புரிந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மட்டுமே மாநில தேர்வு குழுவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். விண்ணப்பங்கள் அனைத்தும் ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மே 10 ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.