புதுடெல்லி: எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று பாலிவுட் நடிகை கங்கனா தெரிவித்தார். தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றை பிரபல சேனலில், அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் முனாவர் ஃபாருக்கி என்பவர் தான் சிறுவயதில் அனுபவித்த அதிர்ச்சிகரமான பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசினார். அப்போது தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட அனுபவத்தை கங்கனாவும் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘நான் சிறுமியாக இருந்த போது, எங்கள் ஊரில் ஒரு பையன் இருந்தான். அவன் என்னை விட சற்று மூத்தவன். அவன் என்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் தொட்டான். ஆனால் அந்த நேரத்தில் எனக்கு அதனை பற்றி புரிதல் இல்லை. அந்தப் பையன் என்னையும், என்னுடன் இருந்த சிறுமிகளின் ஆடைகளை களையச் சொன்னான். பின்னர், எங்களது ஆடையில் சோதனை செய்தான். அந்த சம்பவம் நடந்த போது எனக்கு சுமார் 6 வயது இருக்கும். குழந்தைப் பருவத்தில் பிறர் நம்மை தகாத முறையில் தொடுவார்கள். இதனை நான் நேரில் கூட பார்த்திருக்கிறேன்’ என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.