பெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் வட்டக்கானல் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் இந்த அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால், அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் பெய்த கனமழையால், கடந்த 23ம் தேதி காலை அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெய்த கனமழையால் நேற்று காலை முதல் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் அறிவித்துள்ளார். மேலும், அருவியில் நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என தெரிவித்துள்ளார். இதனால், அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.