×

டெல்லியில் இருந்து சேலத்திற்கு அதிகாரிகள் அனுமதி இன்றி வந்த விமானப்படை வீரர் தற்கொலை

ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடுவலூர் பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சதீஷ்குமார் (30). இந்திய விமானப்படை வீரராக டெல்லியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுவேதா. இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 6 மாதமாக சதீஷ்குமாருக்கு விடுமுறை கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால், டெல்லியிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி விடுமுறை எடுக்காமலும், தனது உயர் அதிகாரிகளிடம் எந்த தகவலும் தெரிவிக்காமலும் சதீஷ்குமார், சேலம் புறப்பட்டு வந்துள்ளார். 22ம் தேதி இரவு பெற்றோரை பார்க்க ஆத்தூருக்கு வந்த அவர், வீட்டிற்கு செல்லும் முன் வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடி, மனைவி சுவேதாவிற்கு போன் செய்து, தான் விஷம் குடித்து விட்டு கோயில் அடிவாரத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பதறிப்போன சுவேதா, உடனடியாக நடுவலூரில் உள்ள தனது மாமியாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவரும், உறவினர்களும் வடசென்னிமலை அடிவாரத்திற்கு சென்று மயங்கி கிடந்த சதீஷ்குமாரை மீட்டு ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, சதீஷ்குமார் இறந்தார்.

இதுபற்றி ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயர் அதிகாரிகளிடம் சொல்லாமல் ஊருக்கு வந்ததால் தற்கொலை செய்தாரா? அல்லது குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.



Tags : Salem ,Delhi , An Air Force soldier who came to Salem from Delhi without the permission of the authorities has committed suicide
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!