சென்னை: தமிழக ஆளுநர் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று, தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமைகள் நலச்சங்கம் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் சங்கம் என்ற இரண்டு புதிய சங்கங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். பின்னர், ராமதாஸ் பேசுகையில், ‘அரசுப் பணியாளர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் களத்தில் இறங்கி முதல் நபராக போராடுவேன். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்’ என்றார்.
பின்னர், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் சுமுகமான உறவு இருக்க வேண்டும். தமிழக மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் குடிபழக்கம் அதிகம் ஆகிவிட்டது. தமிழக அரசு புதிய கொள்கை முடிவெடுத்து ஆண்டுதோறும் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காவல் நிலையங்களில் தவறுகளை தடுக்க சிசிடிவி கேமராக்களை அனைத்து காவல் நிலையங்களிலும் பொருத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.