×

‘நோ பால்’ சர்ச்சை டெல்லி கேப்டன் பன்ட்டுக்கு 100% அபராதம்: தாகூருக்கு 50%; ஆம்ரேவுக்கு தடை

மும்பை: ஐபிஎல் விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பன்ட்டுக்கு போட்டிக்கான ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது. ஷர்துல் தாகூருக்கு 50% அபராதமும், துணை பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவுக்கு 100% அபராதம் மற்றும் ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாங்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு ராஜஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில், டெல்லி அணி 223 ரன் என்ற இமாலய இலக்கை துரத்தியது. ஒபெத் மெக்காய் வீசிய கடைசி ஓவரில் 36 ரன் தேவைப்பட்ட நிலையில், ரோவ்மன் பாவெல் ஹாட்ரிக் சிக்சர் விளாசி டெல்லி அணிக்கு நம்பிக்கை அளித்தார். 3வது பந்து இடுப்புக்கு மேலே ஃபுல்டாசாக சென்றதால் அதை நோ பால் என அறிவிக்க வேண்டும் என நடுவர்களிடம் டெல்லி பேட்ஸ்மேன் குல்தீப் வலியுறுத்தினார்.

நடுவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருக்க, பாவெல் மற்றும் குல்தீப் இருவரும் களத்தை விட்டு வெளியே வருமாறு டெல்லி கேப்டன் பன்ட் சைகை செய்தார். துணை பயிற்சியாளர் ஆம்ரே களத்தின் உள்ளே சென்று நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஆனாலும், அதை நோ பால் ஆக அறிவிக்க முடியாது என நடுவர்கள் தெரிவித்ததை அடுத்து ஆட்டம் தொடர்ந்து நடந்தது. விறுவிறுப்பான அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஐபிஎல் விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக டெல்லி கேப்டன் பன்ட்டுக்கு போட்டிக்கான ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டது. ஷர்துல் தாகூருக்கு 50% அபராதமும், துணை பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவுக்கு 100% அபராதம் மற்றும் ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

Tags : Delhi ,Punt ,Tagore ,Amre , ‘No Ball’ controversy 100% penalty for Delhi captain Punt: 50% for Tagore; Ban on Amre
× RELATED மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிட மறுப்பு