×

கலைத்துறையில் சாதனை படைத்த திருவள்ளூர் மாவட்ட கலைஞர்கள் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயது மற்றும் அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலை சுடர்மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாக கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுய விவர குறிப்பு: நிழற்படம் இணைத்து, வயதுச்சான்று, முகவரிச்சான்றிற்காக ஆதார் அட்டை நகல் மற்றும் கலை அனுபவ சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம்-631502 என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-27269148 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruvallur District , Tiruvallur District Artists Achievements in Arts Can Apply for: Awards
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...