ராசிபுரம்: கடந்த 16 ஆண்டுகளாக மின்வாரியத்தில் தவறு நடந்து வருவதாக கூறிய பாஜ தலைவர் அண்ணாமலைக்கு மாஜி அதிமுக அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு தயாராக உள்ளதாக அவர் கூறினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி அளித்த பேட்டி: ஒன்றிய அரசிடமிருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் டன்னுக்கு மேல் நிலக்கரி தொகுப்புகளை கொடுத்தது கிடையாது. எந்த மாநிலத்துக்குமே முழுத்தேவையை அவர்கள் வழங்கியது கிடையாது. கடந்த 16 ஆண்டு காலமாக மின்வாரியத்தில் நடந்த தவறு காரணமாக, இதுபோல் மின்வெட்டு நடைபெற்று வருகிறது என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டியின்போது கூறுகிறார். அது முற்றிலும் பொய்யானது. நான் 5 ஆண்டுகாலம் மின்துறை அமைச்சராக இருந்துள்ளேன். மத்தியில் அவர்களது ஆட்சிதான் நடக்கிறது. வேண்டும் என்றால், சிபிஐயை வைத்து விசாரிக்கலாம். அதற்கு நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.